நற்றிணை - 87. நெய்தல்
ADVERTISEMENTS
உள் ஊர் மா அத்த முள் எயிற்று வாவல்
ஓங்கல்அம் சினைத் தூங்கு துயில் பொழுதின்,
வெல் போர்ச் சோழர் அழிசிஅம் பெருங் காட்டு
நெல்லி அம் புளிச் சுவைக் கனவியாஅங்கு,
அது கழிந்தன்றே- தோழி!- அவர் நாட்டுப்
பனி அரும்பு உடைந்த பெருந் தாட் புன்னை
துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும்
சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும்,
பெருந் தண் கானலும், நினைந்த அப் பகலே.
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
தோழீ! அத்தலைவரது நாட்டின்கணுள்ள பெரிய அடியையுடைய புன்னையின் குளிர்ந்த அரும்புகள்
மலர்ந்து அவற்றின் பராகம் கடலின் துறையிடத்து மேய்கின்ற இப்பியின் ஈரிய புறத்து
மிக விழாநிற்கும்; சிறு குடியிலுள்ள பரதவர் மகிழும் மகிழ்ச்சியையும் பெரிய தண்ணிய
கழிக்கரையிலுள்ள சோலையையும் நான் நினைந்த அப் பகற்பொழுதின்கண்ணே; ஊரின் உள்ளதாய
மாமரத்திலிருக்கின்ற முட்போன்ற எயிற்றினையுடைய வெளவால் உயர்ந்தவொரு கிளையிற் சென்று
பற்றித் தூங்கா நின்று துயிலுற்ற பொழுதிலே; தனக்குக் கிட்டப்பெறாத வெல்லும்
போரையுடைய சோழர் குடியிற் பிறந்த ஆர்க்காட்டின் உளனாகிய அழிசி என்பவனது பெரிய
காட்டின்கண் உள்ள நெல்லிப்பழத்தின் இனிய புளிச்சுவையைத் தான் பெற்றதாகக்
கனவுகண்டாற் போல யானும் அவரொடு முயங்கினதாகக் கனவுகாண; அவ்வின்பமெல்லாம்
விழித்தவுடன் ஒழிந்து போயிற்று மன் !
வரைவிடை வைத்துப்பிரிய ஆற்றாளாய தலைவி கனாக்
கண்டு, தோழிக்கு உரைத்தது.
கண்டு, தோழிக்கு உரைத்தது.
நக்கண்ணையார்