நற்றிணை - 248. முல்லை
ADVERTISEMENTS
'சிறு வீ முல்லைத் தேம் கமழ் பசு வீ,
பொறி வரி நல் மான் புகர் முகம் கடுப்ப,
தண் புதல் அணிபெற மலர, வண் பெயல்
கார் வரு பருவம்' என்றனர்மன்- இனி,
பேர் அஞர் உள்ளம் நடுங்கல் காணியர்,
அன்பு இன்மையின் பண்பு இல பயிற்றும்
பொய் இடி அதிர் குரல் வாய் செத்து ஆலும்
இன மயில் மடக் கணம் போல,
நினை மருள்வேனோ? வாழியர், மழையே!
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
மேகமே ! நம் காதலர் தாம் வினைவயிற் பிரிந்து செல்கின்ற பொழுது இனி என்று வருவீரோ என்று யாம் வினாவியதற்கு அவர் "சிறிய பூவையுடைய முல்லையின் தேன்மணம் வீசும் பசிய மலரெல்லாம் நல்ல யானையின் புள்ளிகளையும் வரிகளையும் உடைய புகரமைந்த முகம் போல; மெல்லிய புதர்களில் எங்கும் அழகு பொருந்தும்படி மலராநிற்ப மிக்க மழை பெய்தலையுடைய கார்ப்பருவம் அன்றோ யாம் வரும் பருவம்" என்று கூறிச் சென்றார்; அங்ஙனமாக நீ இப்பொழுது மிகுதியும் இவள்பால் அன்பில்லாமையால் இவளுடைய பிரிவினாலுண்டாகிய பெரிய துன்பம் பொருந்திய உள்ளம் நடுங்குதலைச் செய்யும் பொருட்டு; இயல்பில்லாதவற்றை மேற்கொள்ளுகின்ற பொய்ம்மையாக இடிக்கின்ற அதிர்ச்சியையுடைய நின்முழக்கத்தை; மெய்ம்மையாகக் கொண்டு ஆரவாரிக்கின்ற மயிலினமாகிய அறிவில்லாத அக் கூட்டம்போல; நின்னைக் கண்டவுடன் அவர் இப்பொழுது வருகுவர் என்று யானும் மயங்குவேனோ? அங்ஙனம் செய்யேன்; அவர் இயல்பாகிய கார்ப் பருவத்திலேதான் வருகுவர்; நீ வீணே முழங்காதே கொள்; நீடு வாழ்வாயாக!;
பருவம் கண்டு ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி மழை
மேல் வைத்துப் பருவம் மறுத்தது.
மேல் வைத்துப் பருவம் மறுத்தது.
காசிபன் கீரனார்