நற்றிணை - 154. குறிஞ்சி
ADVERTISEMENTS
கானமும் கம்மென்றன்றே; வானமும்
வரை கிழிப்பன்ன மை இருள் பரப்பி,
பல் குரல் எழிலி பாடு ஓவாதே;
மஞ்சு தவழ் இறும்பில் களிறு வலம் படுத்த
வெஞ் சின உழுவைப் பேழ் வாய் ஏற்றை
அஞ்சுதக உரறும்; ஓசை கேளாது
துஞ்சுதியோ- இல, தூவிலாட்டி!-
பேர் அஞர் பொருத புகர் படு நெஞ்சம்
நீர் அடு நெருப்பின் தணிய, இன்று அவர்
வாரார் ஆயினோ நன்றே; சாரல்
விலங்கு மலை ஆர் ஆறு உள்ளுதொறும்,
நிலம் பரந்து ஒழுகும், என் நிறை இல் நெஞ்சே?
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
ஏடீ! வலியிலாதாய்!; காடு கம்மென்று ஒலியடங்குவதாயிற்று; ஆகாயமும் மலைமுழைபோன்ற கரிய இருளைப் பரப்பிப் பலவாய இடிமுழக்கத்தையுடைய மேகம் முழங்குவதும் நீங்குகின்றிலது; மேகம் தவழும் குறுங்காட்டினிடத்திலே களிற்றை வலத்தே விழக் கொன்ற வெய்ய சினத்தையும் அகன்ற வாயையுமுடைய புலியேறு; யாவரும் அஞ்சுமாறு முழங்காநிற்கும்; இவ்வோசையனைத்தையும் செவியில் ஏறட்டுக்கொள்ளாது நீ தூங்குகின்றனையோ? பேர் அஞர்பொருத புகர்படு நெஞ்சம் நீர் அடு நெருப்பில் தணிய பெரிய துன்பம் வந்து மோதுதலானே குற்றப்பட்ட நெஞ்சத்தின் கொதிப்பானது நீர் பெய்த நெருப்புப் போலத் தணியும்படி; இன்று அவர் வாராது விட்டாலோ நல்லதாகும்; சாரலிலே குறுக்கிட்ட மலையின்கண்ணே செல்லுநெறியை நினையுந்தோறும்; நிலையில்லாத என் நெஞ்சமானது அந்த நிலத்தின்கண் பரந்து செல்லாநிற்கும்; யான் யாது செய்யமாட்டுவேன்?
இரவுக்குறித் தலைவன்சிறைப்புறமாக வரைவு
கடாயது.
கடாயது.
நல்லாவூர் கிழார்