நற்றிணை - 190. குறிஞ்சி
ADVERTISEMENTS
நோ, இனி; வாழிய- நெஞ்சே! மேவார்
ஆர் அரண் கடந்த மாரி வண் மகிழ்த்
திதலை எஃகின் சேந்தன் தந்தை,
தேம் கமழ் விரி தார் இயல் தேர் அழிசி,
வண்டு மூசு நெய்தல் நெல்லிடை மலரும்
அரியல் அம் கழனி ஆர்க்காடு அன்ன
காமர் பணைத் தோள் நலம் வீறு எய்திய,
வலை மான் மழைக் கண், குறுமகள்
சில் மொழித் துவர் வாய் நகைக்கு மகிழ்ந்தோயே!
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
நெஞ்சமே! பகைவருடைய புகுதற்கரிய அரணங்களை வென்றுகொண்ட மாரி போல்கின்ற கைவண்மையையும் கள்ளுணவையும் திதலை பரந்த வேற்படையையுமுடைய சேந்தன் என்பானுக்கு; தந்தையாகிய தேன்மணங் கமழும் விரிந்த மாலையையுடைய அழகிய தேரினையுடைய அழிசி என்பவனது; நெற்கதிர்களினிடையே வண்டு மூசுகின்ற நெய்தலின் மலர்கின்ற பூவினின்று; தேன் வடிதலையுடைய வயல் சூழ்ந்த "ஆர்க்காடு" என்னும் ஊரையொத்த; விருப்பம் வருகின்ற பருத்த தோளினழகோடு பெருமையடைந்த வலையிலகப்பட்ட மானினது கண்போன்ற மருண்ட குளிர்ச்சியையுடைய கண்களையுடைய இளமையளாகிய தலைவியின்; சிலவாய் மொழியையுடைய சிவந்த வாயினின்றெழுகின்ற நகைக்கு மகிழ்ந்தோய்; அங்ஙனம் மகிழ்ந்ததனாலே பின்பு கிடைக்கப் பெறாயாய் இனி நீ துன்புறுவாய் காண்; அவ்வகையாகிய துன்பத்துடனே நெடுங்காலம் வாழ்வாயாக;
பின்னின்ற தலைமகன் ஆற்றானாகி நெஞ்சிற்குச்
சொல்லியது; அல்லகுறிப்பட்டு மீள்வான் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம்
ஆம்; இடைச் சுரத்துச் சென்று தலைமகள் நலம் உள்ளி மீளலுற்ற
நெஞ்சினைக் கழறியதூஉம் ஆம்.
சொல்லியது; அல்லகுறிப்பட்டு மீள்வான் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம்
ஆம்; இடைச் சுரத்துச் சென்று தலைமகள் நலம் உள்ளி மீளலுற்ற
நெஞ்சினைக் கழறியதூஉம் ஆம்.