நற்றிணை - 259. குறிஞ்சி
ADVERTISEMENTS
யாங்குச் செய்வாம்கொல்- தோழி!- பொன் வீ
வேங்கை ஓங்கிய தேம் கமழ் சாரல்,
பெருங் கல் நாடனொடு இரும் புனத்து அல்கி,
செவ் வாய்ப் பைங் கிளி ஓப்பி, அவ் வாய்ப்
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி,
சாரல் ஆரம் வண்டு பட நீவி,
பெரிது அமர்ந்து இயைந்த கேண்மை சிறு நனி
அரிய போலக் காண்பேன்- விரி திரைக்
கடல் பெயர்ந்தனைய ஆகி,
புலர் பதம் கொண்டன ஏனற் குரலே?
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
தோழீ! தினையின் கதிரெல்லாம் விரிந்த அலையையுடைய கடல்தான் வற்றினாற்போலக் காயும் பருவம் எய்தினகண்டாய்! இனி அவற்றை நமர் கொய்துகொண்டு போவதன்றி நின்னையும் இல்லின் கண்ணே செறிப்பது திண்ணம; பொன்போன்ற மலரையுடைய வேங்கைமரங்கள் உயர்ந்த மணங்கமழ்கின்ற சாரலின் கண்ணே; பெரிய மலைநாடனொடு கரிய தினைப்புனத்திலே தங்கிச் சிவந்த வாயையுடைய பசிய கிளியை ஓப்பி; அங்குள்ள கரிய பக்க மலையின்கணுள்ள அருவியில் நீர்விளையாட்டயர்ந்து; மலைச்சாரலி லெழுந்த சந்தனமரம் நறுமணங் கமழ்தலால் வண்டு வந்து விழும்படி அச் சந்தனத்தேய்வையைப் பூசி; பெரிதும் விரும்பி இயைந்த நட்பு மிகச் சிறுகி இனி அது தானும் இல்லையாகும் போல யான் காண்பேன்!; ஆதலால் நாம் என்ன செய்ய மாட்டுவேம்;
தோழி தலைமகளைச் செறிப்பு அறிவுறீஇ, வரைவு
கடாயது.
கடாயது.
கொற்றங் கொற்றனார்