நற்றிணை - 16. பாலை
ADVERTISEMENTS
புணரின் புணராது பொருளே; பொருள்வயிற்
பிரியின் புணராது புணர்வே; ஆயிடைச்
செல்லினும், செல்லாய்ஆயினும், நல்லதற்கு
உரியை- வாழி, என் நெஞ்சே!- பொருளே,
வாடாப் பூவின் பொய்கை நாப்பண்
ஓடு மீன் வழியின் கெடுவ; யானே,
விழுநீர் வியலகம் தூணிஆக
எழு மாண் அளக்கும் விழு நெதி பெறினும்,
கனங்குழைக்கு அமர்த்த சேயரி மழைக் கண்
அமர்ந்து இனிது நோக்கமொடு செகுத்தனென்;
எனைய ஆகுக! வாழிய பொருளே!
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
என் நெஞ்சமே ! நெடுங்காலம் வாழ்வாயாக!; நீ இப்பொழுது கருதிய பொருளோ யாம் தலைவியைப் புணர்ந்து இல்லத்துத் தங்கிய வழி அடையப் பெறுவதொன்றன்று; இதனைவிட்டுப் பொருள்வயிற் பிரிந்தாலோ இவளைப் புணரும் புணர்ச்சி இனி அடையப்பெறுவதொன்றன்று; ஆதலின் இவ்விரண்டினையுஞ் சீர்தூக்கிப் பொருள்வயிற் பிரிந்தாயானாலும் பிரியாதிவ்வழி யிருந்தாயானாலும் இவற்றுள் நல்லதொரு காரியத்தைச் செய்தற்குரியை ஆவாய்; ஆயினும் யான் அறிந்த அளவில் பொருள்கள் வாடாத மலரையுடைய பொய்கையிடத்து ஓடுகின்ற மீன் செல்லும் நெறியே போலத் தாமிருந்த விடமும் தெரியாமற் கெடுவனகாண்; யானோவெனில் பெரிய கடல் சூழ்ந்த அகன்ற நிலனே அளக்கு மரக்காலாகக் கொண்டு ஏழு மரக்கால் வரையில் மாட்சிமைப்பட அளக்கத்தக்க பெரிய நிதியைப் பெறுவதாயினும், அந்நிதியை விரும்பேனாகி; இக் கனவிய குழையையுடையாளுடைய மாறுபட்ட செவ்வரி பரந்த குளிர்ச்சியையுடைய கண்கள் பொருந்தி இனிதாக நோக்கும் நோக்கத்தாற் செகுக்கப்பட்டேனாதலின் நின்னொடு மோதற்கு வாரேன்காண்!; இனி அப்பொருள் எத்தன்மையவாயினும் ஆகுக! அவை போற்றுவார்மாட்டு வாழ்வனவாகுக!
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினை நெருங்கித்
தலைவன் செலவு அழுங்கியது.
தலைவன் செலவு அழுங்கியது.
சிறைக்குடி
ஆந்தையார்