நற்றிணை - 276. குறிஞ்சி
ADVERTISEMENTS
'கோடு துவையா, கோள் வாய் நாயொடு
காடு தேர்ந்து அசைஇய வய மான் வேட்டு
வயவர் மகளிர்' என்றிஆயின்,
குறவர் மகளிரேம்; குன்று கெழு கொடிச்சியேம்;
சேணோன் இழைத்த நெடுங் காற் கழுதில்
கான மஞ்ஞை கட்சி சேக்கும்
கல் அகத்தது எம் ஊரே; செல்லாது
சேந்தனை, சென்மதி நீயே- பெரு மலை
வாங்கு அமைப் பழுனிய நறவு உண்டு,
வேங்கை முன்றில் குரவையும் கண்டே.
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
தலைவனே! கொம்பையூதி கௌவிக் கொல்லும் நாயோடு காட்டின் கண்ணே ஆராய்கின்ற விருப்பமுற்ற வலிய மானை வேட்டையாற் கொள்ளும் வேட்டுவ வீரரின் மகளிர் என எம்மைக் கூறுவீராயின்; வேட்டுவ மகளிரல்லேம் யாம் குறமகளிரேம் மலையிலிருக்கிற கொடிச்சியரேம்; தினை காவலன் கட்டிய நீண்டகாலையுடைய கட்டுப் பரணை; காட்டில் இருக்கின்ற மயில்கள் தாம் இருத்தற்குரிய பஞ்சரமாகக் கொண்டு அதன்கண்ணே தங்கா நிற்கும்; எம்மூர் இம் மலையினகத்ததாயிராநின்றது; ஆதலால், நீ இப்பொழுது நின்னூர்க்குச் செல்லாது எம்மூரை யடைந்து பெரிய மலையின் கண்ணே தோன்றி வளைந்த மூங்கிலாலாக்கிய குழாயில் நிரப்பி முற்ற வைத்த கள்ளைப் பருகி; வேங்கை மரத்தையுடைய முன்றிலிலே யாம் அயருங் குரவையையும் கண்டு மகிழ்ந்து பின் நாள் நின் ஊரை அடைவாயாக.
பகற்குறி வந்து பெயரும் தலைமகனை உலகியல்
சொல்லியது.
சொல்லியது.
தொல் கபிலர்