நற்றிணை - 25. குறிஞ்சி
ADVERTISEMENTS
அவ் வளை வெரிநின் அரக்கு ஈர்த்தன்ன
செவ் வரி இதழ சேண் நாறு பிடவின்
நறுந் தாது ஆடிய தும்பி, பசுங் கேழ்ப்
பொன் உரை கல்லின், நல் நிறம் பெறூஉம்
வள மலை நாடன் நெருநல் நம்மொடு
கிளை மலி சிறு தினைக் கிளி கடிந்து அசைஇ,
சொல்லிடம் பெறாஅன் பெயர்ந்தனன்; பெயர்ந்தது
அல்லல் அன்று அது- காதல் அம் தோழி!-
தாது உண் வேட்கையின் போது தெரிந்து ஊதா
வண்டு ஓரன்ன அவன் தண்டாக் காட்சி
கண்டும், கழல் தொடி வலித்த என்
பண்பு இல் செய்தி நினைப்பு ஆகின்றே!
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
காதலையுடைய தோழி !; அழகிய சங்கின் முதுகில் அரக்கைத் தீற்றினாற்போன்ற சிவந்த வரிபொருந்திய இதழையுடைய நெடுந்தூரம் மணங்கமழும் நறவம்பூவின், நறும்தாது ஆடிய தும்பி பசுங்கேழ்ப்பொன் உரைகல்லின் நல் நிறம் பெறூஉம் வளமலை நாடன் நறிய தாதை யளைந்த வண்டு பசிய நிறமுள்ள பொன்னை யுரைக்கும் கட்டளைக் கற்போல நல்ல நிறத்தைப் பெறாநிற்கும் வளம் பொருந்திய மலைநாடன்; நேற்றைப் பொழுது நம்மோடு கிளைத்தல் மிக்க சிறிய தினையில் வீழுங் கிளிகளைக் கடிந்து அங்குத் தங்கியிருந்தும்; தன்குறையைக் கூறுமிடம் பெறானாகிப் பெயர்ந்து போயினான்; யான் கருதுகின்றது அங்ஙனம் அவன் பெயர்ந்ததாகிய ஓரல்லலுடைமையைக் குறித்ததன்று காண் !; தேனையுண்ணும் வேட்கையாலே நறுமலர் இன்னதென ஆராயாது யாண்டும் போய் விழுகின்ற வண்டின் ஒரு தன்மையை யொத்த அவனது; கெடாத தோற்றப் பொலிவினைக் கண்டு வைத்தும்; கழன்ற தொடியை மீண்டு செறித்த எனது பண்பில்லாத செய்கையைக் கருதா நின்றது என்னுள்ளம்; இஃதென்ன வியப்பு !;
தலைமகளைத் தோழி குறை நயப்புக்
கூறியது.
பேரி
சாத்தனார்
சாத்தனார்