நற்றிணை - 201.குறிஞ்சி
ADVERTISEMENTS
'மலை உறை குறவன் காதல் மட மகள்,
பெறல் அருங்குரையள், அருங் கடிக் காப்பினள்;
சொல் எதிர் கொள்ளாள்; இளையள்; அனையோள்
உள்ளல் கூடாது' என்றோய்! மற்றும்,
செவ் வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லித்
தெய்வம் காக்கும் தீது தீர் நெடுங் கோட்டு,
அவ் வெள் அருவிக் குட வரையகத்து,
கால் பொருது இடிப்பினும், கதழ் உறை கடுகினும்,
உரும் உடன்று எறியினும், ஊறு பல தோன்றினும்,
பெரு நிலம் கிளரினும், திரு நல உருவின்
மாயா இயற்கைப் பாவையின்,
போதல் ஒல்லாள் என் நெஞ்சத்தானே.
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
மலையின்கண்ணே உறைகின்ற குறவனின் காதலையுடைய இளமகள் அரிய காவலையுடையவள்; அதனால் நின்னாலே பெறுதற்கரியள் கண்டாய்; நீ கூறிய மொழிகளை ஏற்றுக் கொள்ளும் இயல்புடையள் அல்லள்; அவள் இத்தன்மையளாதலின் அவளை நினைத்தலும் கூடாது என்ற நண்பனே!; சிவந்த வேரையுடைய பலா மரங்களின் பழங்கள் பொருந்திய தெய்வத்தாலே பாதுகாக்கப்பட்டு வருகின்ற; தீது தீர்ந்த நெடிய கொடு முடியையும் அழகிய வெளிய அருவியையுமுடைய கொல்லி மலைச் சாரலிலே; காற்று மோதி யடித்தாலும் வலிய மழை விரைந்து வீசினாலும் சினங்கொண்டு இடிமுழங்கி மோதினாலும்; இவையேயன்றி வேறுபல ஊறுபாடுகள் தோன்றினாலும் பெரிய இவ்வுலகமே சினங்கொண்டு எதிர்த்தாலும்; தன் அழகிய நல்ல வடிவம் கெடாத இயல்பினையுடைய பாவைபோல; என்னெஞ்சினின்றும் நீங்கி ஒழிபவள் அல்லளாயிராநின்றாள்; ஆதலின் அவளை யான் எவ்வாறு மறந்துய்வேன்?
கழறிய பாங்கற்குத் தலைமகன் சொல்லியது.
பரணர்