நற்றிணை - 324. குறிஞ்சி
ADVERTISEMENTS
அந்தோ! தானே அளியள் தாயே;
நொந்து அழி அவலமொடு என் ஆகுவள்கொல்,
பொன் போல் மேனித் தன் மகள் நயந்தோள்?-
கோடு முற்று யானை காடுடன் நிறைதர,
நெய் பட்டன்ன நோன் காழ் எஃகின்
செல்வத் தந்தை இடனுடை வரைப்பின்,
ஆடு பந்து உருட்டுநள் போல ஓடி,
அம் சில் ஓதி இவள் உறும்
பஞ்சி மெல் அடி நடைபயிற்றும்மே!
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
பொன் போலுகின்ற மேனியையுடைய தன் புதல்வியாகிய இவளுடைய விருப்பத்தின்படி நடத்துபவள் ஆதலால்; இவளை ஈன்ற தாய் யாவராலும் இரங்கத்தக்காள்; அவள் தான் நொந்து அழிகின்ற அவலமுடனே இனி எவ்வண்ணம் ஆகுவளோ?; ஐயோ! தந்தங்கள் முற்றிய யானை தனது காட்டில் நிறையப் பெருகியதால் அத்தகைய செல்வமுடைய நெய் பூசினாலொத்த வலிய காம்பு பெருகிய வேற்படை ஏந்திய தந்தையினது; அகற்சியையுடைய இடத்தில்; விளையாடுகின்ற பந்தைக் காலால் உருட்டுபவள் போல; ஓடியோடி அழகிய சிலவாகிய கூந்தலையுடைய இவளுடைய மிக்க பஞ்சு போன்ற மெல்லிய அடிகள் நடைபயிற்றா நிற்குமே!
தலைமகன், பாங்கற்குச் சொல்லியது; இடைச்
சுரத்துக் கண்டோர் சொல்லியதூஉம் ஆம்.
சுரத்துக் கண்டோர் சொல்லியதூஉம் ஆம்.
கயமனார்