நற்றிணை - 261. குறிஞ்சி
ADVERTISEMENTS
அருளிலர்வாழி- தோழி!- மின்னு வசிபு
இருள் தூங்கு விசும்பின் அதிரும் ஏறொடு
வெஞ் சுடர் கரந்த கமஞ் சூல் வானம்,
நெடும் பல் குன்றத்துக் குறும் பல மறுகி,
தா இல் பெரும் பெயல் தலைஇய யாமத்து,
களிறு அகப்படுத்த பெருஞ் சின மாசுணம்
வெளிறு இல் காழ் மரம் பிணித்து நனி மிளிர்க்கும்
சாந்தம் போகிய தேம் கமழ் விடர் முகை,
எருவை நறும் பூ நீடிய
பெரு வரைச் சிறு நெறி வருதலானே.
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
தோழீ! நீ நெடுங்காலம் வாழ்வாயாக!; மின்னல் பிளந்து எழுந்து இருள் நிறைந்த ஆகாயத்தில் அதிர்கின்ற இடிமுழக்கத்துடனே; வெய்ய ஆதித்தன் வெளியிலே தோன்றாதபடி மறையச் செய்த நிறைந்த சூலையுடைய மேகம்; நெடிய பெரிய மலையிடத்துச் சிறிய பலவாக இயங்கி; வருத்தமில்லாத பெரிய மழையைப் பெய்துவிட்ட நடுயாமத்திலே; களிற்றியானைபைப் பற்றிச் சுற்றிக்கொண்ட பெரிய சினத்தையுடைய பெரும்பாம்பு; வெண்மையில்லாது முற்றிய வயிரம் பொருந்திய மரத்துடனே சேரப்பிணித்து மிகப் புரட்டாநிற்கும்; சந்தன மரத்தினின்றும் போந்த நறுமணங் கமழ்கின்ற மலைப் பிளப்பினையுடைய துறுகல்லின் அயலிலே; கொறுக்கச்சியின் நல்ல பூ நீடி மலர்ந்த; பெரிய மலையின்கணுள்ள சிறிய நெறியில் வருதலான்; நம் தலைவர்தாம் நம்பாற் சிறிதும் அருள் உடையார் அல்லர்; இனி அங்ஙனம் வாராதிருக்குமாறு கூறாய்;
சிறைப்புறமாகத் தோழி இரவுக்குறி விலக்கி
வரைவு கடாயது;தலைமகள் இயற்பட மொழிந்ததூஉம் ஆம்.
வரைவு கடாயது;தலைமகள் இயற்பட மொழிந்ததூஉம் ஆம்.
சேந்தன் பூதனார்