நற்றிணை - 4. நெய்தல்
ADVERTISEMENTS
கானல் அம் சிறுகுடிக் கடல் மேம் பரதவர்
நீல் நிற புன்னைக் கொழு நிழல் அசைஇ,
தண் பெரும் பரப்பின் ஒண் பதம் நோக்கி,
அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு,
'அலரே அன்னை அறியின், இவண் உறை வாழ்க்கை
அரிய ஆகும் நமக்கு' எனக் கூறின்,
கொண்டும் செல்வர்கொல்- தோழி!- உமணர்
வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி,
கண நிரை கிளர்க்கும் நெடு நெறிச் சகடம்
மணல் மடுத்து உரறும் ஓசை கழனிக்
கருங் கால் வெண் குருகு வெரூஉம்
இருங் கழிச் சேர்ப்பின் தம் உறைவின் ஊர்க்கே?
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
தோழீ ! கடற்கரைச் சோலையிலுள்ள சிறுகுடியிலிருந்து கடலின்மேற் செல்லும் பரதவர்; நீலநிறத்தையுடைய புன்னையின் கொழுவிய நிழலிலே தங்கி; தண்ணிய பெரிய கடற் பரப்பிற் செல்லுதற்கு நல்ல அற்றம் பார்த்து; அவ்விடத்து முறுக்குண்டு கிடந்த வலையைப் பிரித்துப் புலர்த்தா நிற்கும் துறையையுடைய நம் தலைவர்பாற் சென்று; நமக்குண்டாகிய பழிச் சொல்லை அன்னை அறிந்தால்; இனி இங்குத் தங்கி¢க் களவொழுக்கத்து வாழ்தல் அரியவாகும் என்று கூறினால்; உப்பு வாணிகர் வெளிய கல்லுப்பின் விலை கூறிக் கூட்டமாகிய ஆனிரையை எழுப்புகின்ற; நெடிய நெறியிற் செலுத்தும் பண்டிகள் மணலின் மடுத்து முழங்கும் ஓசையைக் கேட்டு; வயலிலுள்ள கரிய காலையுடைய வெளிய நாரைகள் வெருவா நிற்கும்; கரிய கழி சூழ்ந்த நெய்தனிலத்தின்கணுள்ள தம் உறைவிடமாகிய ஊருக்கு; நம்மை யழைத்துக் கொண்டும் போவரோ?
தலைவன் சிறைப்புறத்தானாக,
தோழி அலர் அச்சம்
தோன்றச் சொல்லி வரைவு கடாயது.
தோன்றச் சொல்லி வரைவு கடாயது.
அம்மூவனார்