நற்றிணை - 397. பாலை
ADVERTISEMENTS
தோளும் அழியும், நாளும் சென்றென;
நீள் இடை அத்தம் நோக்கி, வாள் அற்றுக்
கண்ணும் காட்சி தௌவின; என் நீத்து
அறிவும் மயங்கி, பிறிது ஆகின்றே;
நோயும் பெருகும்; மாலையும் வந்தன்று;
யாங்கு ஆகுவென்கொல் யானே? ஈங்கோ
சாதல் அஞ்சேன்; அஞ்சுவல், 'சாவின்
பிறப்புப் பிறிது ஆகுவதுஆயின்,
மறக்குவேன்கொல், என் காதலன்' எனவே.
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
காதலன் வருவதாகக் கூறிய பருவஞ் சென்றொழிந்ததனால்; என் தோளும் வாட்டமடையும்; நீண்ட நெறியையுடைய சுரத்துவழியை நோக்கி நோக்கி ஒளியற்று என் கண்களும் காணுதற்குரிய பொலிவழிந்தன; எனது அறிவும் என்னைக் கையிகந்து மயக்க மடைந்து வேறாகாநின்றது; நோயை வைத்து உயிர் நீங்காதாகலின் அந் நோயுங் காடேறிச் சென்றொழியாநின்றது; உயிரைப் பெயர்த்தற்குரிய மாலைப் பொழுதும் வந்து இறுத்து விட்டது; இனி யான் எவ்வண்ணமாவேனோ? அறிந்திலேன்; இவ்வுலகத்தில் பிறந்தோர் இறப்பரென்பது உண்மையானே அந்த இறப்பு வந்ததேயென்று யான் அஞ்சுகிற்பேனல்லேன்; அவ்வாறு இறந்துழி; எனது இனி வரும் பிறப்பு மக்கட் பிறப்பின்றி வேறொரு பிறப்பாகி மாறிவிடின் என் காதலனை அப்பொழுது மறப்பேனோ வென்று அவ்வொன்றனுக்கே யான் அஞ்சாநிற்பேன்;
பிரிவிடை ஆற்றாளாகி நின்ற தலைமகளை
வற்புறாநின்ற தோழிக்கு 'ஆற்றுவல்' என்பது படச்
சொல்லியது.
வற்புறாநின்ற தோழிக்கு 'ஆற்றுவல்' என்பது படச்
சொல்லியது.
அம்மூவனார்