நற்றிணை - 27. நெய்தல்
ADVERTISEMENTS
நீயும் யானும், நெருநல், பூவின்
நுண் தாது உறைக்கும் வண்டினம் ஓப்பி,
ஒழி திரை வரித்த வெண் மணல் அடைகரைக்
கழி சூழ் கானல் ஆடியது அன்றி,
கரந்து நாம் செய்தது ஒன்று இல்லை; உண்டு எனின்,
பரந்து பிறர் அறிந்தன்றும்இலரே- நன்றும்
எவன் குறித்தனள் கொல், அன்னை?- கயந்தோறு
இற ஆர் இனக் குருகு ஒலிப்ப, சுறவம்
கழி சேர் மருங்கின் கணைக் கால் நீடி,
கண் போல் பூத்தமை கண்டு, 'நுண் பல
சிறு பாசடைய நெய்தல்
குறுமோ, சென்று' எனக் கூறாதோளே.
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
தோழீ ! நேற்றைப் பொழுதில் நீயும் யானும் சென்று மலரின் நுண்ணிய தாதிற் பாய்ந்து விழுகின்ற வண்டினங்களைப் போக்கி; ஒழிந்த திரை கொழித்த வெளிய மணலடுத்த கழிக்கரை சூழ்ந்த சோலையிடத்து விளையாடியதன்றி; மறைத்து நாம் செய்த செயல் பிறிதொன்றுமில்லை; அங்ஙனம் யாதேனும் செய்ததுண்டென்றால் அது பரவா நிற்கும், நிற்க. அதனைப் பிறர் அறிந்து வைத்தாருமிலர்; அப்படியாக, அன்னை நம்மை நோக்கிப் பொய்கைதோறும் இறாமீனைத் தின்னும் குருகினம் ஒலிப்பச் சுறாவேறு மிக்க கழிசேர்ந்த இடத்து, கணைக்கால் நீடிக் கண்போல் பூத்தமை கண்டு திரண்ட தண்டு நீண்டு நம்முடைய கண்களைப் போலப் பூத்தமை நோக்கியும்; நுண்ணிய பலவாகிய பசிய இலைகளையுடைய சிறிய நெய்தன் மலரைப் (போய்ப்) பறித்துச் சூடிக்கொண்மின் எனக் கூறினாள் அல்லள்; ஆதலின் அவள்தான் பெரிதும் என்ன கருதி யிருக்கின்றனள் போலும்;
சிறைப்புறமாகத்தோழி செறிப்பு
அறிவுறீஇயது.
அறிவுறீஇயது.
குடவாயிற் கீரத்தனார்