நற்றிணை - 251. குறிஞ்சி
ADVERTISEMENTS
நெடு நீர் அருவிய கடும் பாட்டு ஆங்கண்,
பிணி முதல் அரைய பெருங் கல் வாழைக்
கொழு முதல் ஆய் கனி மந்தி கவரும்
நல் மலை நாடனை நயவா, யாம், அவன்
நனி பேர் அன்பின், நின் குரல் ஓப்பி,
நின் புறங்காத்தலும் காண்போய், நீ? என்
தளிர் ஏர் மேனித் தொல் கவின் அழிய,
பலி பெறு கடவுட் பேணி, கலி சிறந்து,
நுடங்கு நிலைப் பறவை உடங்கு பீள் கவரும்;
தோடு இடம் கோடாய், கிளர்ந்து,
நீடினை விளைமோ! வாழிய, தினையே!
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
தினையே! நெடிதாம் நீர்மையுடைய அருவியினது ஒலிமிக்க அவ்விடத்திலே; பிணிப்புண்ட அடியையுடைய பெரிய மலையிடத்துண்டாகிய வாழையின் கொழுத்த அழகிய கனியை; மந்திகள் கவர்ந்து உண்ணாநிற்கும் நல்ல மலைநாடனை விரும்பி; யாம் அவனது கருணைமிக்க அன்பினால் நின்னுடைய கதிர்களைக் கிளிகள் கொய்யாதபடி ஓப்பி நின்னைப் பாதுகாத்திருப்பதையும் நீ கண்டிருக்கின்றாயன்றே? ; தளிர் போன்ற என்னுடம்பில் உள்ள பழைய அழகு கெடும்படி; அன்னையானவள், யான் வெளிப்படாதவாறு இல்வயிற் செறித்து ஆடு முதலிய பலியைப் பெற இருக்கின்ற முருகவேளை வழிபட்டு; மாதர்குழாத்தொடு கூடி ஒலிமிக்கு வெறியெடுக்குங்காலை; யான் நின்னைக் காப்பதில்லாது கைவிட்டு விடுதலானே கிள்ளை முதலாய பறவைகள் ஒருசேர வந்து உன்னுடைய கதிர்களைக் கொய்துகொண்டு போகாநிற்கும், ஆதலின் இப்பொழுது நின்கதிர்த்தோட்டினிடம் தலைசாயாது நிமிர்ந்து நின்று நெடுநாட் கழித்துக் கதிரீன்று விளைவாயாக! நீ நெடுங்காலம் வாழ்வாயாக!
சிறைப்புறமாகச் செறிப்பு
அறிவுறீஇயது.
அறிவுறீஇயது.
மதுரைப் பெருமருதிள நாகனார்